ரூ.2.10 லட்சம் மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: தனது வீட்டிற்கு ரூ.2.10 லட்சம் மின் கட்டணம் செல்லுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (43). ஆட்டோ டிரைவரான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2 மாடி கொண்ட சொந்த வீட்டில் வசித்து வந்தார். விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு தற்போது வரை தனது வீட்டிற்கான மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பல முறை மின்வாரிய அதிகாரிகள் வீட்டிற்கான மின் கட்டணம் கட்ட சொல்லியும் அவர் கட்டாமல் இருந்துவந்துள்ளார்.

இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான மின் கட்டணம் ரூ.2.10 லட்சம் கட்ட கோரி நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் விஜயகுமார் மின் கட்டணம் செலுத்த தனது நண்பர்களிடம் கடன் கேட்டுள்ளார். அவர்கள் யாரும் பணம் கொடுக்காததால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *