ஹோட்டல் பார்ட்டியில் ரகளை தட்டிக்கேட்டவருக்கு அடி உதை

அண்ணா நகர்,வளசரவாக்கம், அன்பு நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மா, 36. இவரது தம்பி ஜானவாஸ், 30. இருவரும் அண்ணா நகர், வசந்தம் காலனி ஏழாவது தெருவில் உள்ள தனியார் உணவகத்தில், நேற்று முன்தினம் உணவு அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களின் அருகில் 20க்கும் மேற்பட்டோர் சத்தம் போட்டபடி, அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். இது, உணவகத்தில் சாப்பிட வந்த மற்றவர்களுக்கு தொந்தரவாக அமைந்தது.

ஒருகட்டத்தில், வள்ளியம்மா மற்றும் அவரது தம்பி ஜானவாஸ் ஆகியோர், சம்பந்தப்பட்ட நபர்களை தட்டிக்கேட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த நபர்கள், ஜானவாஸை சரமாரியாக தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர். இதில், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், 30 பேர் அனுமதி பெற்று, உணவகத்தில் பார்ட்டி நடத்தியுள்ளனர். அப்போது அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஜானவாஸை தாக்கிய, நொளம்பூரை சேர்ந்த சுரேஷ், 39, நெடுங்குன்றத்தைச் சேர்ந்த முரளி, 34, ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *