அடையாறு ஆற்றில் குப்பை ஏர்போர்ட் அதிகாரிகள் கடிதம்
பல்லாவரம், சென்னை விமான நிலையத்தை ஒட்டி, அடையாறு ஆறு செல்கிறது. சமீபகாலமாக விமான நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி செல்லும் அடையாறு ஆற்றங்கரையில் குப்பை, இறைச்சி கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவு கொட்டுவது அதிகரித்து விட்டது.
குறிப்பாக, பொழிச்சலுார், கவுல்பஜார், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால், பறவைகள் சுற்றுவது அதிகரித்து, விமானங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தை ஒட்டியுள்ள அடையாறு ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சுத்தம் செய்யவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் வேண்டும் என, விமான நிலைய அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆலந்துார் மண்டலம், பரங்கிமலை கண்டோன்மென்ட், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகிய அலுவலகங்களுக்கு, இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.