ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னை,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் முகமது கவுஸ், 31. கடந்த டிச., 15 இரவு, சி.டி.,ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, 20 லட்சம் ரூபாயுடன், இருசக்கர வாகனத்தில் அண்ணாசாலை வழியாக சென்றார்.
அப்போது, திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 48, சைதாப்பேட்டை காவல் நிலைய எஸ்.ஐ., சன்னிலாய்டு, 48 ஆகிய இருவரும், வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து, 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தனர்.
இதுதொடர்பாக, முகமது கவுஸ் கொடுத்த புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42 ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய வணிக வரித்துறை அதிகாரிகளான, சுரேஷ், 49, பாபு, 41, ஜானகி ராமன் உட்பட, 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதால், திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இரண்டும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.