சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணி அமர்த்தினால் அபராதம்

தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், தொழிலாளர் கமிஷனர் ஆகியோரின் அறிவுரைகளின்படி குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினருடன் கூட்டாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் பணிபுரிந்ததாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னை 2-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) உத்தரவின்படி, சென்னை 18-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வர் `ஆபரேஷன் ஸ்மேல்’ குழு மற்றும் தன்னார்வ குழுவினருடன் புகார் தெரிவிக்கப்பட்ட உணவு நிறுவனத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு பணிபுரிந்த சிறுவன் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சட்டப்படி சம்பந்தப்பட்ட வேலையளிப்பவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சிறுவனை பணியமர்த்தியது குற்றம் என தீர்ப்பளிக்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் நீதிமன்றத்தின் மூலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை 2-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *