ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வெள்ளையன் தலைமையில் நடந்தது

அரிசி, பருப்பு, கோதுமை, பால் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, பேரவை தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் பேசும்போது, “அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எந்த காலத்திலும் இல்லாத கொடுமையாக அரிசி, பருப்பு, கோதுமை, பால் மற்றும் அத்தியாவசிய உணவுபொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான ஜி.எஸ்.டி. வரியை ஒழிக்கவேண்டும். இதேபோல சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும். ஏற்கனவே உயர்த்தப்பட்டிருக்கும் வீட்டு வரியையும் குறைக்கவேண்டும். பன்னாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு பாரம்பரிய சில்லரை வணிகம் சீரழிந்து வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *