ரூ.8.50 லட்சம் போதை பொருளுடன் ஐ.டி., ஊழியர்கள் 5 பேர் சிக்கினர்

சென்னை, அண்ணாசாலை காவல் நிலைய எல்லையில், ஒயிட்ஸ் சாலை – ஸ்மித் சாலை சந்திப்பில் போதை பொருள் விற்கப்படுவதாக, ஏ.என்.ஐ.யு., எனும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நேற்று காலை, அந்த இடத்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது, சந்தேகப்படும்படியாக நின்ற வேளச்சேரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 24, தரமணி பாலச்சந்திரன், 28, கொளத்துார் யுவராஜ், 25, பெரம்பூர் சுகைல், 24, அம்பத்துார் பிரவீன், 31, ஆகியோரிடம் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 23 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 5.30 கிராம் உயர் ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த போதை பொருட்களின் மதிப்பு, 8.50 லட்சம் ரூபாய்.

தொடர் விசாரணையில், கைதான ஐந்து பேரும் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது. கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த இருவர், அங்கிருந்து மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து, இவர்களுக்கு விற்று வருவதும் தெரியவந்துள்ளது.

கைதான ஐந்து பேரும், ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்த தங்கள் கூட்டாளிகளுக்கு, போதை பொருட்களை வினியோகிக்கும் போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இது தொடர்பாக, மேலும், 8 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *