போரூரில் சதுப்புநில பூங்கா: முதல்வர் திறப்பு
சென்னை,போரூர் ராமாபுரத்தில், 16.6 ஏக்கர் பரப்பளவில், 15.70 கோடி ரூபாயில், சமூக கல்வி, காலநிலை குறித்த, எம்.எஸ்.சுவாமிநாதன் சதுப்புநில பசுமை பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. சதுப்பு நிலம் சார்ந்த உயிரினங்கள் மற்றும் நீர்நிலைகளை பொதுமக்கள் கண்டுகளிக்க, 600 மீட்டர் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செடிகள், மரங்கள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. பூங்காவை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், நான்கு கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு; சாந்தாங்காடு ஸ்டீல் யார்டில், 20 கோடி ரூபாயில், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகளை, முதல்வர் திறந்து வைத்தார்.
சி.எம்.டி.ஏ., வாயிலாக, காட்டுப்பாக்கம் இந்திரா நகரில், 19.10 கோடி ரூபாய், போரூர் கணேஷ் நகரில், 12.9 கோடி ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மையங்கள் கட்டப்பட உள்ளன.
சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில், 1.43 கோடி ரூபாயில் கால்பந்து மைதானம்; குத்தம்பாக்கம், சிட்கோ மற்றும் புதுார் மேடு ஆகிய இடங்களில், 1.63 கோடி ரூபாயில், சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 9.50 கோடி ரூபாயில் அரசு பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.
சைதாப்பேட்டை அம்மா பூங்கா, 3.65 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளது.
எம்.எம்.டி.ஏ., காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஐந்து கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கே.கே.நகர் சிவன் பூங்கா, 4.60 கோடி ரூபாயிலும், தாம்பரம் அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளம், 5.80 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்பட உள்ளன.
அம்பத்துார் பானு நகரில், 7.01 கோடி ரூபாயில் மைதானம் என, மொத்தம் 70.70 கோடி ரூபாய் மதிப்பிலான, 10 புதிய பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.