மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

சென்னை, ‘சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது’ என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்

சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள், 2021ல் துவங்கின. இதில் என்னென்ன திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து, தொலை நோக்கு ஆவணம் தயாரிக்க முடிவானது.

இதற்காக, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தி, 45,000த்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இது மட்டுமின்றி, பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள், வல்லுநர்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன.

இந்த கருத்துகள் அடிப்படையில் தொலை நோக்கு ஆவணம் மற்றும் மூன்றாவது முழுமை திட்ட அடிப்படை ஆவணம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமூக உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள், புதிய திட்டங்கள், எதிர்கால பணிகள் உள்ளிட்ட, 28 தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், மூன்றாவது முழுமை திட்டத்தில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் இறுதி செய்யப்படும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *