கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

பெரம்பூர்: எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், கஞ்சா புகைப்பதாகவும் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் முல்லை நகர் சுடுகாடு பகுதியில் வைத்து எம்கேபி நகர் போலீசார் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்

அப்போது அவர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தார். போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி பி.வி காலனி 28வது தெருவை சேர்ந்த சமீர் (23) என்பது தெரிய வந்தது. இவர் யாரிடமிருந்து கஞ்சாவை வாங்கினார் என்று விசாரணை நடத்திய போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் பெயரை கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் எம்கேபி நகர் போலீசார் கொடுங்கையூர் ஜவகர் தெருவை சேர்ந்த கிஷோர் (21), எம்கேபி நகர் கிழக்கு 19வது தெருவை சேர்ந்த கார்த்திக் (22), வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (21) என 3 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். இவர்களில் கார்த்திக் மற்றும் ஆனந்த் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்று வருவதும் கிஷோர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வருவதும் தெரிய வந்தது.

இவர்கள் 3 பேரும் வெளி ஆட்களிடம் இருந்து கஞ்சாவை வாங்கி பயன்படுத்துவது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆனந்த், கார்த்திக், கிஷோர், சமீர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *