மேம்படும் பரங்கிமலை ரயில் நிலையம் மார்ச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்

சென்னை:’பல்வேறு வசதிகளுடன், 14.15 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வரும் பரங்கிமலை ரயில் நிலையம், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்’ என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

‘அம்ரித் பாரத்’ நிலைய திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலுார்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்துார், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய, 17 நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

பரங்கிமலை ரயில் நிலையத்தில், 14.15 கோடி ரூபாயில் நடந்து வரும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக, 98 விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன; 201 மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு தினமும், 25,000 பேர் வந்து செல்கின்றனர். பயணியர் வசதிக்காக, இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

மின்சார ரயில் சேவை, மாநகர பஸ், மெட்ரோ ரயில் சேவை ஆகிய வசதிகளுடன், வேளச்சேரி — பரங்கிமலை மேம்பால ரயில் சேவையும் இணையும்போது, பன்முக போக்குவரத்துக்கான முக்கிய மையமாக, பரங்கிமலை ரயில் நிலையம் மாறும்.

பாதசாரிகள் எளிதாக அணுகும் வகையில், புதிதாக பாதசாரி பிளாசா ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதுபோல, ரயில் நிலையத்தின் நடைமேடை மேம்பாடு, ‘சிசிடிவி’ கேமரா, வாகன நிறுத்தம், எஸ்கலேட்டர்கள், லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன், பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அடுத்த மாதம் இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட இந்த ரயில்

நிலையம் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *