5,800 மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காமல் அவதி

சென்னை, மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத்தின் தலைவர் சரவணன் கூறியதாவது:

அரசு தரப்பில் வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலருக்கான உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், 2023ம் ஆண்டிற்குப் பின், புதிதாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு உதவித்தொகை வழங்காமல் இருப்பது, வேதனையாக உள்ளது.

மேலும், 5,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த, மாதாந்திர உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. கேட்டால், அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை.

சென்னையில், புதிதாக விண்ணப்பித்துள்ள 5,800 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் என, அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஓராண்டிற்கு மேலாகியும், உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இது தமிழக அரசின், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான, அக்கறையற்ற செயலை காட்டுகிறது.

எனவே, உதவித்தொகை வேண்டி புதிதாக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும், விண்ணப்பித்த மாதத்தில் இருந்து விடுபட்டுள்ள அனைத்து மாதத்திற்கும், சேர்த்து உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லையென்றால், காத்திருப்பு போராட்டத்தை தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *