அமைந்தகரை போலீசுக்கு தண்ணி காட்டிய சைக்கிள் திருடன் அயனாவரத்தில் கைது
அயனாவரம்: அமைந்தகரை போலீசாருக்கு, பல மாதங்களாக தண்ணி காட்டிய, ‘பலே’ சைக்கிள் திருடன், அயனாவரம் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.
அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் திருடும் நபரை, அமைந்தகரை தனிப்படை போலீசார் பல மாதங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, அயனாவரம் சந்தை பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக சைக்கிளில் சுற்றிய நபரை, அயனாவரம் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், வில்லிவாக்கம், மாடவீதியைச் சேர்ந்த வெங்கட்ராமன், 59 என்பதும், திருட்டு சைக்கிள் வைத்திருப்பதும் தெரிந்தது. மேலும், அமைந்தகரை, அரும்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு, பல மாதங்களாக தண்ணி காட்டி வந்த, சைக்கிள் திருடன் என்பது தெரிந்தது.
தகவலறிந்து, அயனாவரம் வந்த அமைந்தகரை தனிப்படை போலீசார், குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டனர். ஆனால், அயனாவரம் தனிப்படை போலீசார், ‘நாங்கள்தான் பிடித்தோம்’ எனக்கூறி, வெங்கட்ராமனை ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் வெங்கட்ராமன் திருடிய, விலை உயர்ந்த 25 சைக்கிள்களை, அயனாவரம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின், நேற்று மாலை அவரை சிறையில் அடைத்தனர்.