மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தானாக முன்வந்து விசாரித்த வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மெரினா லூப் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு மீன் கடைகள் அகற்றப்பட்டு மீன் விற்பனையாளர்களுக்கு கடைகள் ஒடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையில் இருபுறமும் மீன் கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மீன் விற்பனை செய்பவர்களுக்காக 356 கடைகள் அடங்கிய மிகப்பெரிய மீன் அங்காடி கட்டப்பட்டது. பின்னர் அந்த கடைகள் தகுதியானவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, மீன் கடைகள் புதிய அங்காடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மீன் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு புதிய மீன் அங்காடியில் கடைகள் வழங்கப்பட்டுள்ளது. 356 பேருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது லூப் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் இல்லை.

ஏதாவது ஆக்கிரமிப்பு வந்தால் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி தரப்பின் உத்தரவாதத்தை பதிவு செய்து வழக்கை முடித்துவைத்தனர். ஆக்கிரமிப்புகள் மீண்டும் வந்தால் இந்த வழக்க மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *