பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாக்க சென்னை சென்ட்ரலில் டிஜிட்டல் லாக்கர் வசதி
சென்னை, பிப்.16: சென்னை சென்ட்ரலில் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க புதிதாக டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் லாக்கர் அமைப்பு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. லாக்கர்களை போன்செல் என்ற நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் உடைமைகளின் அளவைப் பொறுத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சுமார் 80 லாக்கர்களை அமைத்துள்ளது. இது ரயில் நிலையத்தில் உள்ள லாக்கர் அறைக்கு ஒரு டிஜிட்டல் மாற்றாகும். முன்பெல்லாம் பயணிகள் தங்களது உடைமைகளை வைக்க பூட்டு சாவியை பயன்படுத்துவர். ஆனால் தற்போது இவை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு இது பாதுகாப்பை உறுதி செய்யும். பயணத்தின் போது பொருட்களை சேமித்து வைப்பதை லாக்கர்கள் எளிதாக்குகின்றன. குறிப்பாக வேறு வேறு இடங்களுக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்றால், இடையில் சில மணிநேர நேர இடைவெளி இருக்கும் அப்போது அந்த இடையில் இவற்றை பயன்படுத்தலாம். அதே போல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரயில் நிலையத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு இந்த டிஜிட்டல் லாக்கர் உதவிகரமாக இருக்கும்.
க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், லாக்கர் செயலி திறக்கும். பின்னர் லாக்கர் அளவை தேர்வு செய்து, நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து, தொகை காண்பிக்கப்படும். ஜி.பே மூலம் பணம் செலுத்தலாம். பின்னர், லாக்கர் எண்ணுடன் தனிப்பட்ட ஒடிபி பயணியின் செல்போனுக்கு அனுப்பப்படும். உடைமைகளை திறந்து எடுக்க ஒடிபி குறியீட்டை பயன்படுத்த வேண்டும். லாக்கரை பூட்ட மீண்டும் குறியீட்டை பயன்படுத்த வேண்டும்