ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
அயனாவரம், அயனாவரம், கே.கே.நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 40; ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 9ம் தேதி இரவு, தன் ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். நள்ளிரவில், அதேபகுதியை சேர்ந்த ரவுடி கருணாகரன், 22 மதுபோதையில் ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அவரை ஆட்டோவில் இருந்து இறங்கும்படி, ராஜா கூறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கருணாகரன், கீழே கிடந்த கட்டையால், ராஜாவை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட கருணாகரனை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.