125 சவரன் போலி நகைகளை அடகு வைத்த கில்லாடி சிக்கினார்
விருகம்பாக்கம், சாலிகிராமம், மதியழகன் நகரைச் சேர்ந்தவர் வீரம்சந்த், 44. இவர், சாலிகிராமம் தசரதபுரத்தில் ‘சுலிலா’ என்ற நகைக்கடையை, 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, நேற்று முன்தினம் மாலை வந்த வாலிபர், 3 சவரன் நகைகளை அடகு வைத்து, 1.20 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
முன்பின் தெரியாத நபர் என்பதால், தனக்கு தெரிந்த யாராவது சிபாரிசு செய்ய வேண்டும் என, நகைக்கடை உரிமையாளர் வீரம்சந்த் கூறியுள்ளார். சில வினாடிகளில், விருகம்பாக்கம் எல்.டி., காலனியைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவர் கடைக்கு வந்தார்.
அவர், ‘நகை அடகு வைக்க வந்த நபர் தனக்கு தெரிந்த நபர் தான்; நம்பி பணம் தரலாம்’ எனக் கூறியுள்ளார். இருவரது நடவடிக்கை மீது வீரம்சந்திற்கு சந்தேகம் வந்துள்ளது. ஆனால், அதை காட்டிக்கொள்ளாமல், நகைகளை வாங்கி சோதனை செய்துள்ளார்.
அவை போலி நகை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஏற்கனவே தன் கடையில், கார்த்திக் அடகு வைத்த நகைகளின் விபரத்தை எடுத்து பார்த்தார். அதில், கடந்த ஜன., 23ம் தேதி முதல் தற்போது வரை நான்கு முறையாக, 6.68 லட்சம் ரூபாய்க்கு 125 சவரன் நகைகளை அடகு வைத்தது தெரிய வந்தது.
அதை சோதனை செய்தபோது, அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 28, அம்பத்துாரைச் சேர்ந்த குஷால் கோட்டாடியா, 28, என்பதும், அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இவர்களிடம் அடகு வைக்க கொடுத்து நகைகளை கொடுத்து அனுப்புவதாகவும், கிடைக்கும் பணத்தில் ‘கமிஷன்’ தொகையை பெற்றதும் தெரியவந்தது.
ராமகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.