ஒரே நாளில் தாம்பரம் மாநகராட்சியில் 2.38 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

தாம்பரம்: தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் 2.38 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் 4வது மண்டலம், 32வது வார்டு, கடப்பேரி பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் நேற்று குடற்புழு நீக்க நாள் முகாம் நடந்தது. மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியின் சார்பில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 929 குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் 1 முதல் 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு பாதி அளவு (200எம்ஜி) மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை ஒரு அல்பெண்டேசோல் மாத்திரையும் (400எம்ஜி) வழங்கப்பட்டது. மேலும் விடுபட்டவர்களுக்கு வரும் 17.2.2025 அன்று குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் பொற்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *