மெட்ரோ அட்டை மீத தொகை ‘சிங்கார சென்னை’க்கு மாற்றம்?

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க, 2023 ஏப்., 14ல், ‘சிங்கார சென்னை அட்டை’ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையில், அனைத்து சேவையும் பெறும் வகையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், புதுவண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, நந்தனம் உட்பட, 11 மெட்ரோ ரயில் நிலையங்களில், வரும் ஏப்., 1 முதல் மெட்ரோ பயண அட்டை விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. எனவே, இந்த அட்டையில் உள்ள தொகையை பயன்படுத்திக்கொள்ள நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

மெட்ரோ பயண அட்டையை தினமும் லட்சகணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அட்டை படிப்படியாக நிறுத்தப்படும் என, நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணியர் சிலர் மெட்ரோ பயண அட்டையில், 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை இருப்பு வைத்திருக்கின்றனர்.

இந்த தொகை அடுத்த இரண்டு மாதத்தில் முடிக்க முடியாது. சிலர், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே பயணம் செய்கின்றனர். எனவே, இதில் உள்ள தொகையை, புதியதாக வாங்கும், ‘சிங்கார சென்னை அட்டை’க்கு மாற்றிக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *