காலை சிற்றுண்டி ஒப்பந்தம் அண்ணாமலை எதிர்ப்பு

சென்னை, ‘காலை உணவு திட்டத்திற்கு உணவு தயாரிக்க, தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை, சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

அவரது அறிக்கை:

சென்னையில் உள்ள, 350க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்திற்கு, ‘அம்மா’ உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது.

இதன் வாயிலாக, அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்க பெற்று வந்தது.

கடந்த, 2023, காலை உணவு திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க, சென்னை மாநகராட்சி முயன்ற போது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அந்த முடிவை கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்கு தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த, 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக அறிவித்தது, தி.மு.க., அரசு.

அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்கு தாரை வார்க்க, இரு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?

கண்துடைப்புக்காக திட்டங்களை அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காக திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக ‘டிராமா’ மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் தி.மு.க., சென்னை மாநகராட்சியையும், பள்ளி குழந்தைகளையும் அதற்கு பயன்படுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறேன்.

தொடர்ந்து, அம்மா உணவகங்களிலேயே காலை உணவு திட்டத்திற்கான உணவு தயாரிக்க வேண்டும். தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை, சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *