டிஜிட்டல் தகவல் பலகைகளில் விளம்பரத்துக் கு முக்கியத்துவம் ரயில் பயணியர் விரக்தி
சென்னை:தெற்கு ரயில்வேயின் பிரதான ரயில் நிலையங்களான, சென்ட்ரல், எழும்பூரில் இருந்து தினமும் 250க்கும் மேற்பட்ட, விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையங்களில் தினமும் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.
பயணியரின் வருகை மற்றும் புறப்பாடு விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில், ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் நடைமேடை பகுதிகளில், ஆங்காங்கே ‘டிஜிட்டல்’ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த திரைகளில் பெரும்பாலான நேரங்களில், தனியார் விளம்பரங்கள் இடம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
ரயில்களின் வருகை, புறப்பாடு விபரங்களை அறிந்து கொள்ள முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘டிஜிட்டல் திரைகள்’ உள்ளன. பயணியரின் விபரங்களை காண, பயணியர் கூட்டமாக காத்திருக்கின்றனர். ஆனால், விளம்பரங்களே அதிகம் இடம்பெறுகிறது. ரயில்களின் கால அட்டவணை விபரங்கள் மிகவும் குறைவாகவே இடம் பெறுகிறது.
ரயிலிகளின் வருகை நேரம், நடைமேடைகளின் தகவலை பெற லக்கேஜ்களுடன் காத்திருப்போருக்கு, இது, கோபத்தை ஏற்படுத்துகிறது. விளம்பரங்களை மட்டுமே திரையிடும் வகையில், பிரத்யேக திரையை வைத்துக் கொண்டால், பயணியருக்கு தொந்தரவு இருக்காது. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.