ரவுடி ‘ பாம் ‘ சரவணனுக்கு நீதிமன்ற காவல்; பழிபோட மனைவி திட்டமிடுவதாக சந்தேகம்

சென்னை, போலீசார் துப்பாக்கியால் சுட்டதால், தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ரவுடி பாம் சரவணனை, வரும், 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.\

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ரவுடி பாம் சரவணன், 41. ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் பதுங்கி இருந்த அவரை, மூன்று நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.

வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் பதுக்கி வைத்துள்ள நாட்டு வெடிகுண்டை எடுத்து தருவதாக கூறிய சரவணன், அங்கு சென்றதும் தப்பிக்க முயன்றார். அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால், போலீஸ் எஸ்.ஐ., மணியை வெட்டினார். இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் காலில் சுட்டு, பாம் சரவணனை பிடித்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட பாம் சரவணனுக்கு, காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கைதிகளுக்கான வார்டில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் இயல்பாக பேசுவதால் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2018ல் காணாமல் போனதாக கூறப்படும் ரவுடி பன்னீர்செல்வத்தை ஆந்திராவுக்கு கடத்தி, ஆற்றக்கரையில் வைத்து, கொலை செய்து எரித்துக்கொன்ற வழக்கிலும் பாம் சரவணன் கைது செய்யப்பட உள்ளார்.

என்கவுன்டர் கதறல்

பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி வழக்கறிஞர். அவர் குழந்தைகளுடன் டில்லியில் வசிப்பதாக கூறப்படுகிறது. தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

பொங்கல் பண்டிகை கொண்டாட குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்த மகாலட்சுமி, கணவர் கைது என்ற தகவல் கிடைத்ததும், போலீசார் என்கவுன்டர் செய்யப் போவதாக கதறி, தகவல்களை கசியவிட்டார். கணவர் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு அளித்தார்.

அதன் பிறகே, பாம் சரவணனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த தகவல் வெளியானது. மகாலட்சுமியின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *