பொங்கல் பண்டிகை: 14,104 பஸ் இயக்கம்
சென்னை, ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 5,736 சிறப்பு பேருந்துகள் உட்பட, 14,104 பேருந்துகள் இயக்கப்படும்’ என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 10 முதல் 13ம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும், 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து, மொத்தம் 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதுபோல், பயணியர் நெரிசல் இன்றி செல்ல வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின், வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரையில், வெளியூரில் இருந்து சென்னைக்கு வழக்கமாக வரும், 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள் சேர்த்து இயக்கப்படும்.
பயணியர் பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044- 2474 9002, 044- 2628 0445, 044 -2628 1611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர் — செங்கல்பட்டு அல்லது வண்டலுார் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
↓கிளாம்பாக்கம் பஸ் நிலையம்: புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, துாத்துக்குடி செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம்.
↓கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையம்: வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை.
↓கோயம்பேடு: காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, திருத்தணி.
↓மாதவரம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பஸ்கள், வழக்கமாக திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.
குமரிக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்க எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. டிக்கெட் கிடைக்காத பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, ‘தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுமா?’ என, பயணியர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பயணியர் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வர். ஆனால், போதிய அளவில் ரயில்கள் இல்லாததால், தென்மாவட்ட பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே,சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது, ‘பொங்கலையொட்டி, ஏற்னவே ஐந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமான விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குவோம். முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்குவது குறித்து, ஆலோசிக்கப்படும்’ என்றனர்.