தினசரி மின்சார ரயில்கள் தாமதம் சென்னை – கும்மிடி பயணியர் அவதி

சென்னை,சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில், மின்சார ரயில்கள் தினமும் தாமதமாக இயக்கப்படுவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை ஆகிய இரு வழித்தடங்களிலும், 320க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பாதை பராமரிப்பு உள்ளிட்ட பணி காரணமாக, 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. தற்போது இயக்கப்படும் மின்சார ரயில்களில், சில ரயில்கள் தினமும் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு செல்ல 45 நிமிடங்கள் போதும். ஆனால், தற்போது ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால், ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.

பராமரிப்பு என்ற பெயரில், ரயில் சேவை குறைக்கப்பட்டதோடு, இயக்கப்படும் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

மேலும், ரயில்கள் தாமதமாக இயக்குவது குறித்து, நிலையங்களில் முன்கூட்டியே அறிவிப்பு செய்வது கிடையாது. எனவே, பயணியரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ”பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன், ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்படும். தற்போது இயக்கப்படும் மொத்த ரயில்களில், நான்கு ரயில்கள் மட்டுமே ஒன்பது பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

இந்த மாதத்திற்குள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டு விடும். பயணியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *