மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு : கட்டிட விதி மீறல் மீது விரைந்து நடவடிக்கை

சென்னை: விதிமீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டிட விதிமீறல் தொடர்பாக சென்னையை சேர்ந்த சாந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சீல் வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீஸ்க்கு மனுதாரர் அளித்த விளக்கத்தை மாநகராட்சி நிராகரித்தது.

இதை எதிர்த்து அரசுக்கு மறு ஆய்வு மனு அளித்த நிலையில், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசிடம் அளித்த மறு ஆய்வு மனுவை பரிசீலிக்க உரிய நேரம் வழங்க வேண்டும். அவ்வாறு நேரம் வழங்காமல் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

சென்னை மாநகரம் விதிமீறல் கட்டிடங்களால் கான்கிரீட் காடாக மாறிவிட்டது. இதன் காரணமாக நகரம் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகளை சந்திக்கிறது. விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால் அண்டை வீட்டார் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக செயல்படுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *