தாம்பரம் மேம்பால பாதை மாற்றியமைப்பு : தினம் தினம் சிக்கி தவிக்கும் நெரிசலுக்கு.. தீர்வு!
தாம்பரம் : தாம்பரத்தில் தினமும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, தற்போதுள்ள மேம்பாலத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கில் சண்முகம் சாலையை ஒட்டி இறங்கும் பாதையை, சுரங்கப்பாதையில் இருந்து நேராக நீட்டிக்கப்பட உள்ளது. அதேபோல்,இரும்புலியூரில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், அணுகு சாலையில், ‘யு டர்ன்’ எடுத்து, சண்முகம் சாலைக்கு செல்லவும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகனங்களின் நுழைவாயிலாக, தாம்பரம் விளங்குகிறது. ரயில், பேருந்துகள் வாயிலாக தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு, தாம்பரமே துவக்கமாக உள்ளது.
இங்கு, சிறப்பு பெற்ற கிறிஸ்துவ கல்லுாரி, நெரிசல் மிகுந்த சந்தை, ரயில் நிலையம், மருத்துவமனை, ஹோட்டல் போன்றவை உள்ளன. இதனால், 30 கி.மீ., சுற்றளவில் இருந்து, தினமும் லட்சக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக, தாம்பரம் வந்து செல்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு வகைகளில் தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியடைந்து உள்ளன. அதை விட போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்து, தீராத பிரச்னையாக உள்ளது.
தாம்பரத்தில் முறையான வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லை. இருசக்கரம் மற்றும் கார்களில் வருவோர், முக்கிய சாலைகளில் தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அனைத்து வேலைகளையும் முடித்து, பல மணி நேரம் கழித்து, வாகனங்களை எடுத்து செல்கின்றனர்.
இது போன்ற பிரச்னைகளால் ராஜாஜி, காந்தி, சண்முகம், அப்துல் ரசாக், முத்துரங்கம் முதலி போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் தொடர்ச்சியாக, அதையொட்டியுள்ள உட்புற சாலைகளிலும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன், போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக, முடிச்சூர், ஜி.எஸ்.டி., — வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பலம் கட்டப்பட்டது.
இப்பாலம், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில், சுரங்கப்பாதையை ஒட்டி இறங்குகிறது. கிழக்கு பகுதியில், ரயில்வே பேருந்து நிறுத்தத்தை ஒட்டி ஏறுகிறது.
அப்போதைய போக்குவரத்து நெரிசல் தீர்வுக்கு இந்த பாலம் கைகொடுத்தது. ஆனால், தற்போதைய வளர்ச்சி, வாகனங்களின் பெருக்கத்தால் மீண்டும் பிரச்னை தீவிரமடைந்தது.
தென்மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், இந்த மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி., சாலையில் ஒரே நேரத்தில் நுழைவதால், கட்டுக்கடங்காத நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைப்பதற்குள் பலதரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் நெரிசல் பலமடங்கு அதிகரிக்கும் என, பல தரப்பிலும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், தாம்பரம் நெரிசலுக்கு தீர்வாக, மேம்பாலத்தை மாற்றி அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில், சண்முகம் சாலையை ஒட்டி இறங்கும் பாதை, சுரங்கப்பாதை அருகே நேராக செல்லாமல், வளைந்து செல்கிறது. அந்த இடத்தில், சுரங்கப்பாதையை சற்று மாற்றி அமைத்து, மேம்பால பாதை பேருந்து நிறுத்தம் வரை நேராக எடுத்து செல்லப்பட உள்ளது.
இதற்காக, கடை, செல்வ விநாயகர் கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட உள்ளது.
சந்தை பகுதியான சண்முகம் சாலைக்கு சென்று, ஜி.எஸ்.டி., சாலைக்கு வர முறையான சாலை வசதி இல்லை. அதனால், இரும்புலியூரில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், சுரங்கப்பாதைக்கு முன், இடது புறம், ‘யு – டர்ன்’ எடுத்து அணுகு சாலை வழியாக, நேராக சண்முகம் சாலைக்கும், அங்கிருந்து வெளிவந்து, ஜி.எஸ்.டி., சாலைக்கும் செல்லும் வகையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. அதனால், விரைவில் இப்பணி துவங்கும் என, தெரிகிறது.
திட்டமிட்டப்படி இப்பணிகள் முடிந்தால், தாம்பரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும். அதேநேரத்தில், சந்தை பகுதிக்கு சிரமமின்றி மக்கள் எளிதாக சென்று வரலாம்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
தாம்பரத்தில் ஏற்படும் நெரிசலை தீர்க்க, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில், 10 கோரிக்கைகளில் ஒன்றாக குறிப்பிட்டு, முதல்வரிடம் வழங்கினோம். இதையடுத்து, 10 கோடி ரூபாய் செலவில், மேம்பால பாதையை நேராக நீட்டிக்கவும், வாகனங்கள்
சண்முகம் சாலைக்கு சென்றுவரவும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டியுள்ளது. அப்பணி முடிந்ததும் மற்ற பணிகள் துவங்கும்.
– எஸ்.ஆர்.ராஜா,
தாம்பரம் தி.மு.க., – எம்.எல்.ஏ.,
இடவசதி இருக்கும்
சண்முகம் சாலையை, மேம்பாலத்துடன் நேராக இணைக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. இப்பணி முடிந்ததும், மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், நேரடியாக சண்முகம் சாலைக்கு செல்லலாம்.
அங்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, அப்படியே ஜி.எஸ்.டி., சாலைக்கு சென்றுவிடலாம். மேலும், மேம்பாலப் பாதை நேராக மாற்றப்பட உள்ளதால், நெரிசல் குறைவதோடு, வாகனங்களுக்கு ஏற்ப இடவசதியும் கிடைக்கும்.
– நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்