555 வர்மானிகளை கொண்டு தற்காப்பு வர்ம மருத்துவம்: தாம்பரம் சித்த மருத்துவமனையில் இயக்குநர் மீனாகுமாரி தகவல்
சென்னை: தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் வரும் 18ம் தேதி ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை கொண்டு 555 நபர்களுக்கு தற்காப்பு வர்ம மருத்துவம் வழங்கி சாதனை நிகழ்ச்சி நடைபெறும் என்று இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி கூறியதாவது: சித்த மருத்துவத்தின் சிறப்புகளை உலகிற்கு பறை சாற்றவும், அதன் பயன்களை அறிவியல் பின்புலத்தோடு அனைவரும் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தவும், மீண்டும் நோய் வராமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் அதன் நுட்பங்களை வெளிக்கொணரவும் பல வகைகளை பின்பற்ற வேண்டிய நிலையில் சித்த மருத்துவர்கள் உள்ளனர்.
அதிக பொருட்செலவில்லாமல், நெடுநாட்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல், உடனடி குணம் கிடைக்கக் கூடியதுமான வர்ம மருத்துவ முறைகளை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டிய நிலையில் பலவித முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு, சித்த மருத்துவத்தின் வர்ம மருத்துவ சிறப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கின்னஸ் சாதனை ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
சித்த மருத்துவத்தின் நன்மைகளையும், வர்ம மருத்துவத்தின் சிறப்புகளையும் உலகமெங்கும் பரப்ப முயற்சி செய்து வருகின்றது. அதற்காக வரும் டிசம்பர் 18ம் தேதி ஒரே நேரத்தில் 555 வர்மானிகளைக் (வர்ம சிகிச்சை நிபுணர்கள்) கொண்டு 555 நபர்களுக்கு தற்காப்பு வர்ம மருத்துவ பரிகாரத்தினை வழங்கி சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் சித்த மருத்துவத்தின் புகழ் உலகெங்கும் பரவிடும் என்ற அளவில் மத்திய ஆயுஷ் அமைச்சக ஆலோசனை மற்றும் உதவியுடன் இந்நிறுவனம் வெகு விமர்சையாக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.