புறநகர் மின்சார ரயில்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வழக்கம் போல் இயங்கும்
சென்னை, டிச.10: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் வார நாள்களில், வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த டிச.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இதற்கான மாற்று அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அனைத்து நாள்களிலும் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சில ஊடங்களில் தவறுதலாக செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த மாற்று அட்டவணை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.