தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்: உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான வெளிப்படை காரணம் தெரியவில்லை
தாம்பரம்: உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான வெளிப்படை காரணம் தெரியவில்லை என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் கடந்த 1ம் தேதி அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு குடிநீர் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என கருதுகிறோம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து தண்ணீரை வாங்கி அதை அப்படியே வினியோகம் செய்கிறோம்.
கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு இறப்பு ஏற்பட்டுள்ளது. 2 பகுதிகளில் தலா 5 சோதனைகளை எடுத்துள்ளோம். இந்த முடிவு வந்தால் மட்டுமே, உண்மை என்ன என்பது தெரியவரும். கன்டோன்மென்ட் பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வரலட்சுமி (88) வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இறந்துள்ளார். ஒருவேளை அவருக்கு வயிற்று போக்கு, வாந்தி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அது வெளியே தெரியவில்லை. திருவேதியின் சொந்த ஊர் மாங்காடு. 4 நாட்களுக்கு முன் பல்லாவரம், காமராஜர் நகரில் உள்ள சகோதரி மீனா என்பவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த திருவேதி நேற்று முன்தினம் கழிப்பறையில் வழுக்கி விழுந்துள்ளார். அதேபோல் கன்டோன்மென்ட் பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மோகனரங்கம் என்பவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு உண்டு. திருவேதி, மோகனரங்கம் உடல்களின் முதல்கட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான வெளிப்படையான காரணம் தெரியவில்லை. அதனால் விரிவான அறிக்கைக்கு புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வர 8 வாரங்கள் ஆகும். அதன்பின் முழு விவரம் தெரியும். இவ்வாறு கூறினார்.