தேங்காய் பறித்தவர் மின்சாரம் பாய்ந்ததில் தவறி விழுந்து பலி

அம்பத்தூர், டிச. 5: அம்பத்தூர் சூரப்பட்டு, மேட்டூர் 6வது தெருவை சேர்ந்த தம்பதி குணசேகரன் (61), சித்ரா (50). குணசேகரன் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மேட்டூர் 5வது தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பாரிஜாதம் தெருவில் உள்ள தனது வீட்டில் தேங்காய் பறிக்க அழைத்துள்ளார். இரும்பு தொரட்டியை குணசேகரனிடம் கொடுத்துள்ளார். அவர், 12 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரில் ஏறி தேங்காய் பறித்துள்ளார். அப்போது, இரும்பு தொரட்டி, அருகே சென்ற மின்கம்பியில் உரசியதால் குணசேகரன் உடலில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், குணசேகரனின் மனைவி சித்ரா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு மீது புகார் அளித்துள்ளார். கடைக்கு சென்ற என் கணவரை தேங்காய் பறிக்க அழைத்துச் சென்றதாகவும், அவர் உயிரிழக்க காரணமாக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *