யார் கெத்து என்பதில் தகராறு தலையில் கல்லை போட்டு கார் டிரைவர் படுகொலை: தலைமறைவான நண்பர்களுக்கு வலை

குன்றத்தூர், டிச. 5: குன்றத்தூர் ஒண்டிக்காலனி, அக்னீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (29). இவர், அதே பகுதியில் கார் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். தினமும் வேலை முடிந்ததும் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு, நேற்று முன்தினம் இரவும் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் யார் கெத்து என்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்துவந்து, விஜயின் தலையில் தூக்கிப் போட்டனர்.

இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விஜய் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த விஜய் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் கைதானால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *