ஐகோர்ட் வாயில்கள் ஒரு நாள் மூடல்
சென்னை:ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மரபுப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின், அனைத்து நுழைவு வாயில்களும், நேற்றிரவு 8:00 மணி வரை மூடப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தை, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 107 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, நீதிமன்ற கட்டடம், நிலம் உள்ளிட்டவை, உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே சொந்தமானது. இதை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒருமுறை, சென்னை உயர் நீதிமன்றம் நுழைவு வாயில்கள் அனைத்தும், 24 மணி நேரம் இழுத்து மூடப்படும்.
அப்போது உள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த சொத்தின் மீது, உயர் நீதிமன்ற நிர்வாகத்துக்கு உள்ள ஆதிக்கத்தை நிலைநாட்ட, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படுகிறது. அதை பின்பற்றி, நேற்று முன் தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று இரவு 8:00 மணி வரை, உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, நேற்று இரவு 8:00 மணி வரை, அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. அப்போது, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என, எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.