அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!
வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; பிணைக் கைதிகளாக பிடிபட்ட பலர் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வர். கொல்லப்பட்டது யாஹ்யா சின்வர் தான் என இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பு எங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகிற்கும் நல்ல நாள். டி.என்.ஏ., பரிசோதனை மூலம் சின்வார் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சின்வார் கொல்லப்பட்டதை அறிந்து நெதன்யாகுவை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்ட சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதன் மூலம் உலகில் எங்கும் எந்த பயங்கரவாதியும், நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
அமைதிக்கு தடை
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனால் கூறியதாவது: அமைதிக்கு தடையாக கருதப்படும் ஒரு பயங்கரவாதியின் கொலை, போரை முடிவுக்கு கொண்டு வதற்கான முன்னேற்றத்தின் அறிகுறி. கடந்த சில வாரங்களாக, சின்வார் பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டதால், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.