தகுதி பெறாத ஊழியர்களுடன் விமானத்தை இயக்கிய ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்!

புதுடெல்லி: தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

பிரபல ஏர் இந்தியா நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதற்காகவும், தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.90 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜூலை 10-ஆம் தேதி ஏர் இந்தியா சமர்ப்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விமானம் மும்பையில் இருந்து ரியாத்துக்கு செல்லும்போது தகுதிபெறாத பயிற்சி விமானி விமானத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, டிஜிசிஏ விசாரணையை மேற்கொண்டு ஒழுங்குமுறை விதிகளில் குறைபாடுகள் மற்றும் பல மீறல்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.90 லட்சமும், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ.6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை கிண்டல் செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *