வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்த வடகொரியா தற்போது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

பியாங்யாங், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் கடல்பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா எங்கள் நாட்டின் எல்லைக்குள் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணை ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *