ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்யலாம்: சென்னையில், 12-ந்தேதி பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் – 19 இடங்களில் நடக்கிறது

பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்துக்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய ரேஷன் அட்டை, நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர முடியாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த முகாமில் மக்கள் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *