புகையிலை பொருட்கள் விற்பனை: 700 கிலோ குட்கா பறிமுதல், 153 பேர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது தொடர்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 700 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகளும், 5 கிலோ மாவா, 3 செல்போன்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை சூளைமேடு பத்மநாபா நகரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது, 644 கிலோ எடையிலான ஹான்ஸ் புகையிலை பிடிபட்டது. அதை எடுத்து வந்த திருவேற்காடு ஈஸ்வரன் நகரை சேர்ந்த முனிரத்தினம் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். குட்கா புகையிலை பொருட்களுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும், ராயப்பேட்டை முஸ்தராபேகம் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்த தரணி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 கிலோ எடையிலான புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *