அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: கேரளாவை சேர்ந்த நபர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கைது
கேரளா மாநிலம் ஆலப்புழாவில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த தாகிர் உசேன் (வயது 51) என்பவர் சென்னையில் சுற்றி திரிவதாக கேரளா போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த நபர் ரெயில் நிலையம் வந்தால் மடிக்கி பிடிக்க சென்னை சென்டிரல் ரெயில் நிலைய போலீசாரிடமும், ரெயில்வே பாதுகாப்பு படையினருடனும் உதவி கோரியிருந்தனர்.
சென்டிரல் இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன், ரெயில் நிலையம் முழுவதும் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே ரெயில்வே பாதுகாப்பு படையினரே, ஏற்கனவே ஏமாந்த நபரை வைத்து மீண்டும் அந்த மோசடி நபரிடம் லாவகமாக பேசி அரசு வேலை வாங்கி தரவேண்டுமென கூறி, சென்டிரல் ரெயில் நிலைத்துக்கு அந்த ஆசாமியை வரவழைத்தனர்.
அங்கு வந்த அந்த நபரை, ரெயில்வே போலீசார் கேரள போலீசாருடன் இணைந்து செயல்பட்டு மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த நபர், கட்டுப்பாக்கம், ராயல் கார்டன் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கேரளா போலீசாரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.