சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க, மதுரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.

‘தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், மதுரை கோர்ட்டில் ஆஜராகவில்லை’ என, அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கனிமவளம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சகாயம் இன்றும் ஆஜராகவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். உரிய பாதுகாப்பை வழங்காவிட்டால், அவருக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *