அதிகாரிகள் திடீர் ஆய்வால் காசிமேடு சந்தையில் சலசலப்பு
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும் கடல் வளத்தை பாதுகாக்கவும், ஆண்டுதோறும் ஏப்., முதல் ஜூன் மாதம் வரை, மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில், மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பழுது நீக்குவது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவர்.
சிறிய ரக பைபர் படகுகள் வைத்துள்ள மீனவர்கள் மட்டும், சிறிது துாரம் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர். இதனால், மீன் வரத்து குறைவாகவே இருந்தது; விலையும் உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், காசிமேடு மீன் சந்தையில் ‘பழைய மீன்கள் பதப்படுத்தி விற்கப்படுகிறதா; வெளி மாநிலங்களில் இருந்து மீன் வாங்கி வந்து விற்கின்றனரா’ என, மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் அது மாதிரியான மீன் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 1,200 – 1,300
சூரை 200 – 300
பாறை 600 – 800
கறுப்பு வவ்வால் 600 – 700
கவளை 150 – 200
பர்லா 300 – 350
கடல் விரால் 500 – 600
சீலா 600 – 700
கானங்கத்த 250 – 300
இறால் 400 – 600
நண்டு 300 – 400