ரூ.338 கோடி சொத்துவரி செலுத்திய 3.25 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி முறையாக செலுத்திய, 3.25 லட்சம் பேருக்கு, 1.70 கோடி ரூபாய் வரை மாநகராட்சி ஊக்கத்தொகை வழங்கி உள்ளது.
நிதியாண்டின் முதல் அரையாண்டு துவக்கத்தில் 30 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு, மாநகராட்சி சார்பில், 5 சதவீதம் அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025 – 26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு துவக்கமான, ஏப்., 1 முதல் இதுவரை, 338.30 கோடி ரூபாய் வரை மாநகராட்சி வரி வசூலித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை அலுவலர் பானு சந்திரன் கூறியதாவது:
போதிய விழிப்புணர்வு காரணமாக, மாநகராட்சியிக்கு முறையாக சொத்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2024 – 25ம் நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில், 229.38 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில், 3.25 லட்சம் பேரிடமிருந்து, 338.30 கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது.
இதன் வாயிலாக தற்போது, 1.70 கோடி ரூபாய் வரை, சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை சலுகையை, ஏப்., 30க்கும் மட்டுமே பெற முடியும். எனவே, அதற்குள் சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியை செலுத்தி, ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.