வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
சென்னை, வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்தாண்டிற்கான விழாவை முன்னிட்டு, இன்று முதல் 14ம் தேதி வரை லட்சார்ச்சனை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
இதில், இன்று முதல் 10ம் தேதி வரை, மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 7:30 மணிக்கு துவங்கி பகல் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணி வரையும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்களிடம், அர்ச்சனை ஒன்றிற்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படும்.
பங்குனி உத்திரமான வரும் 11ம் தேதி, உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலாசாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தியாகின்றன.
மேலும், 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதியுலா நடக்கிறது. வரும், 12 முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது.
முதல் நாள் தெப்பத்தில் வடபழனி முருகன் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.