டில்லி – சென்னை மெட்ரோ ரூ.5,870 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னையில், மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் – சோழிங்கநல்லுார் ஆகிய மூன்று வழித்தடங்களில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடக்கிறது.
மொத்தம் 118 கி.மீ., துாரம் இயக்கம் மற்றும் மாதவரம், பூந்தமல்லி, செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகளை 5,870 கோடி ரூபாயில் மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதற்கான ஏற்பு கடிதத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக், டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் குமாரிடம் நேற்று வழங்கினார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஒப்பந்தத்தில், இரண்டாம் கட்டத்தில் உள்ள மூன்று வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணியருக்கான சேவை, ரயில்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் அடங்கும்.
இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணியரின் சேவை துவங்கும் நாளில் இருந்து 12 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்.
டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.