வீடு ஒப்படைக்க தாமதித்த நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை,செங்கல்பட்டு மாவட்டம் தையூரில், அக் ஷயா நிறுவனம் சார்பில், 2013ல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில் வீடு வாங்க, சுர்பிவூரா என்பவர் அதே ஆண்டில் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தப்படி, 30 லட்ச ரூபாயை, பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.
கட்டுமான பணி தாமதத்தால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, 2016ல் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக, சுர்பிவூரா, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.
இந்த மனு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என். உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி, குறிப்பிட்ட கால கெடுவுக்கள் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. பணிகளை முடிக்க, ஏழு ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுதுள்ளது தெளிவாக தெரிகிறது.
எனவே, வீட்டை ஒப்படைக்காமல் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு, 5 லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயும் அளிக்க வேண்டும்.
அடுத்த, 90 நாட்களுக்குள் இந்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.