கள ஆய்வுக்கு சென்ற வருவாய் அதிகாரிகள். .. துரத்தியடிப்பு பட்டா வேண்டாம் என ஆக்கிரமிப்பாளர்கள் அடம்
சென்னையில் ஆட்சேபனையற்ற அரசு நிலத்தில் வசிக்கும், 6,096 பேருக்கு, அரசு உத்தரவுப்படி இலவச வீட்டு மனை பட்டா வழங்க, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், 2 சென்ட்டுக்கு மேல் இருந்தால் வீட்டை இடித்து, இடம் மீட்கப்படும் என்று கூறும் அதிகாரிகளை, பொதுமக்கள் துரத்தியடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பட்டா வழங்குவதில் உள்ள இடையூறுகளை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, 532 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 1962ம் ஆண்டு ஆணைப்படி, ஆட்சேபனையற்ற அரசு இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்போருக்கு பட்டா வழங்க தடை இருந்தது.
அதை நீக்கி, உரிய வழிகாட்டுதலுடன் பட்டா வழங்க, கடந்த பிப்., 10ல், அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, பிப்., 21ல் அரசாணை வெளியிடப்பட்டது.
சிக்கல்
அதில், பாறை, கல்லாங்குத்து, கிராமநத்தம், அரசு நஞ்சை, புஞ்சை ஆகிய வகைப்பாடு உடைய, ஆட்சேபனையற்ற அரசு இடங்களை வரைமுறை செய்து, அதில் பட்டா வழங்கலாம்.
அதேபோல், பாதை, மயானம், களம் ஆகிய வகைப்பாடு கொண்ட இடத்தில் வசித்தால், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம், எதிர்கால பயன்பாட்டுக்கு தேவையில்லை என, தடையில்லா சான்று பெற்று, பட்டா வழங்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், நீர்நிலைகள், வனம், மேய்க்கால், கன்டோன்மென்ட், ரயில்வே, மத நிறுவனங்கள் பெயரில் உள்ள பட்டா, கோவில் நிலங்கள் ஆகியவை, ஆட்சேபனை நிலங்களாக கருதி, அதில் பட்டா வழங்க கூடாது என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், சென்னையில் உள்ள 17 தாலுகாக்களில் ஆட்சேபனையற்ற, 6,096 அரசு இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி மக்கள் வசிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், மாதவரம் தாலுகாவில் 1,830; சோழிங்கநல்லுாரில் 1,035; அம்பத்துாரில் 750 இடங்கள் உள்ளன. மீதமுள்ள தாலுகாக்களில், 50 முதல் 400 இடங்கள் வீதம் உள்ளன.
இவர்களுக்கு, பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதில் சில வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளால், பட்டா வழங்கவுள்ள இடங்களை ஆய்வு செய்வதில் சிக்கல் உள்ளது.
தவிர, கள ஆய்வு செய்து, இடத்தை அளந்து, பயனாளிகளிடம் பணம் வசூலித்து பட்டா வழங்கும் நடவடிக்கையை, 2025 டிச., 31க்குள் முடிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கையை, வருவாய்த் துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
எதிர்ப்பு
முதற்கட்டமாக இடத்தை அளந்து, ஆவணங்களை பெறும் அதிகாரிகள், அரசு குறிப்பிட்டுள்ள அளவிற்குமேல் இடம் இருந்தால், பணம் செலுத்த
அறிவுறுத்தப்படுகிறது.
தவிர, அதிகமாக இடமிருந்தால், அவற்றை மீட்பது தொடர்பான விபரங்களையும், வசிப்போரிடம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு, பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை துரத்தியடிக்கின்றனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசின் உத்தரவுப்படி 2 சென்ட் வைத்திருப்போருக்கு பட்டா வழங்கப்படும். ஆனால், ஆய்வுக்கு சென்றால், ஒவ்வொருவரும், 8 சென்ட் வரை அரசு இடம் வைத்துள்ளனர்.
அதில் 3 முதல் 5 சென்ட் இடம் வரை வீடு கட்டி உள்ளனர். சிலர் 2 சென்ட்டுக்குள் வீடு கட்டி உள்ளனர். ஒரு சென்டில் வீடு கட்டியவர்கள் மிகவும் குறைவு.
இரண்டு சென்ட் வைத்திருப்போர், ஒரு சென்ட்டுக்கு, 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை, வழிகாட்டி மதிப்புப்படி, அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள், அத்தொகையை செலுத்த முன்வரவில்லை.
சிரமம்
மூன்று சென்ட் வைத்திருப்போர், பணம் செலுத்தி பட்டா பெற்றாலும், ஒரு சென்ட் இடத்தை மீட்க விடமாட்டோம் என்கின்றனர். சிலர் வீட்டுடன் கடைகளை சேர்த்து கட்டி உள்ளனர்.
மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கொண்டவர்கள், ‘உங்களிடம் பட்டா கேட்டோமா; இலவசமாக என அறிவித்து விட்டு, லட்சக்கணக்கான ரூபாய் செலுத்த கூறுகிறீர்கள். இனிமேல் இந்த பக்கமே வராதீர்கள்’ என துரத்திவிடுகின்றனர்.
பெரும்பாலானோர் வீடு கட்டி உள்ளதால், கட்டடத்தை உடைத்து மீட்பது கடினம். அப்படியே மீட்டாலும், ஆங்காங்கே ஒரு சென்ட், இரண்டு சென்ட் என இருக்கும். அந்த இடத்தை அரசு திட்டங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது.
அரசாணை உத்தரவில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளன. இதனால், டிச., 31க்குள், உத்தரவை செயல்படுத்துவது சிரமம். கள பிரச்னைகளை கருத்தில் கொண்டு, உயர்அதிகாரிகள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்ன நியாயம்?
அரசு பட்டா தரும் என கருதி தான், வீட்டை கட்டினோம். இப்போது, 2 சென்ட்டுக்கு மேல் இருந்தால் இடித்து மீட்போம் என கூறுவது, எந்த விதத்தில் நியாயம். குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால், சந்தை மதிப்பில் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். வீட்டை இடிக்காமல், பட்டா வழங்கும் வகையில், அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
-பயனாளிகள்
திடீர் சிக்கல்
பயனாளிகளின் ஆண்டு வருவாய் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் வீடு கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்திருக்க வேண்டும் அதற்கான முகவரி சான்று வைத்திருக்க வேண்டும் வாடகைக்கு விடவோ, கடைகள் கட்டியோ இருக்கக்கூடாது எவ்வளவு இடத்தில் வீடு கட்டி இருந்தாலும், ஒரு சென்ட் இடம் இலவசம்; மீத இடத்திற்கு வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பணம் செலுத்தினால், 2 சென் வரை பட்டா வழங்கப்படும் இரண்டு சென்ட்டுக்கு மேல் இருந்தால், அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் பட்டா பெற்றபின் 10 ஆண்டுகள் வரை அந்த இடத்தை விற்பனை செய்யக்கூடாது. இது சம்பந்தமாக ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.