விஜய் கட்சி உறுப்பினர் மீது ‘ ஆசிட்’ ஊற்றியோர் கைது
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 37; த.வெ.க., உறுப்பினர். இரு நாட்களுக்கு முன், த.வெ.க.,வின் பெயர் பலகையை, புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகரில் நட்டு வைத்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரத், 37, அவரது சித்தப்பா செந்தில் ஆகியோர், அவ்வழியே நடந்து வந்தனர்.
தினேஷ், மரியாதை நிமித்தமாக செந்திலுக்கு வணக்கம் வைத்தார். இதற்கு சரத், தன் சித்தப்பாவுக்கு எப்படி வணக்கம் வைக்கலாம் எனக்கூறி தகராறு செய்தார்; இருவருக்கும் இடையே கைகலப்பானது.
ஆத்திரமடைந்த சரத், தன் நண்பர்கள் சுபாஷ், 32, அரவிந்த், 35, ஆண்ட்ரூஸ், 30, ஆகியோருடன், தினேஷ் வீட்டுக்கு சென்று, அவரை தாக்கினார்; ஆசிட்டும் ஊற்றினார். இதில் தினேஷீக்கு கை, கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சரத், சுபாஷ், அரவிந்த், ஆண்ட்ரூஸ் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.