அக்காவின் காதலரை கொன்ற வழக்கு தம்பியின் நண்பர்கள் மூவருக்கு ‘ ஆயுள்’
சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 25. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் காதல் இருந்துள்ளது.
இதையறிந்த பெண்ணின் தம்பியான சிறார், தன் நண்பர்களான அயனாவரத்தைச் சேர்ந்த சந்தோஷ், 25, சுப்பிரமணியராஜ், 24, டேவிட், 19, ஆகியோருடன் சேர்ந்து, வினோத்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2017 அக்., 7ல் ஐ.சி.எப்., சேமிப்பு கிடங்கு பின்புறம் வினோத்குமார் வந்தபோது, அவரை நான்கு பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
நான்கு பேரையும் அயனாவரத்தைச் சேர்ந்த மதன், 26, என்பவர், மதுராந்தகத்திற்கு அழைத்து சென்று, அங்கு தன் உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். இது குறித்து விசாரித்த ஐ.சி.எப்., போலீசார், அந்த பெண்ணின் தம்பி, 17, சந்தோஷ், சுப்பிரமணியராஜ், டேவிட் மற்றும் மதன் ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணின் தம்பி சிறுவன் என்பதால், அவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்து வந்தது.
போலீஸ் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சந்தோஷ், சுப்பிரமணியராஜ், டேவிட் ஆகியோர் மீது, கொலை குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 2,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. விசாரணை காலத்தில் மதன் இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.