ரசாயனம் கலந்த 1,000 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்
சென்னை, வள்ளுவர்கோட்டம் பகுதியில், 1,000 கிலோ ரசாயனம் கலந்த தர்ப்பூசணியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோடை வெயில் அதிகரித்து வருவதால், நீர், இளநீர், தர்ப்பூசணி ஆகியவைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இவற்றை பயன்படுத்தி, பெரும்பாலானோர் தரமற்ற குடிநீர், ரசாயனம் கலந்து பழுக்க வைத்த தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க, அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கின்றனர்.
அதன்படி, வள்ளுவர்கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்ப்பூசணி கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.]
ஆய்வின்போது, கெட்டுப்போன நிலையில் இருந்த, 1,000 கிலோ தர்ப்பூசணி பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள், ரசாயனம் கலந்த பழங்கள், கெட்டுப்போன பழங்களை விற்பனை செய்ய வேண்டாம். அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் வரும் நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.