வகுப்பறைக்கு பெயின்ட் அடித்த பள்ளி மாணவர்களால் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 650க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர்.
சில நாட்களில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், மாணவர்களிடம் பணம் வசூலித்து, வகுப்பறைக்கு பெயின்ட் அடிக்க முடிவானது.
அதன்படி, மாணவர்களே பெயின்ட் அடிக்க வேண்டும் என, தலைமையாசிரியர் ராஜிவ் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குள், ஆபத்தான முறையில், ஜன்னல் மீது ஏறி, பெயின்ட் அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்காமல், வகுப்பறைக்கு பெயின்ட் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.