மரத்தை அகற்ற கலெக்டர் உத்தரவு அலட்சியம் காட்டும் மாநகராட்சி
அயனாவரம், அண்ணா நகர் மண்டலம், அயனாவரம், பெரியார் சாலையைச் சேர்ந்தவர் லதா, 81. இவரது வீட்டின் நுழைவாயிலில், இடையூறாக வளர்ந்துள்ள ராட்சத மரத்தை அகற்ற வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டார்.
கலெக்டர் ரஷ்மி சித்தார்த், மரத்தை அகற்றும்படி கடிதம் அனுப்பியும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மூதாட்டி லதா கூறியதாவது:
வீட்டின் நுழைவாயிலில் போக்குவரத்திற்கு இடையூறாக, ராட்சத புங்கை மரம் வளர்ந்துள்ளது. இதனால், வீட்டிற்குள் சென்று வர சிரமமாக உள்ளது.
மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தேன். இதுகுறித்து ‘தினமலர்’ நாளிதழிலும் செய்தி வெளிவந்தது. அதன் அடிப்படையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதிகாரிகள் அறிக்கையின்படி, மரத்தை அகற்ற கலெக்டர் அனுமதியளித்தார்.
இது தொடர்பாக, மாநகராட்சியிடம் பல முறை அணுகியும், ‘இது எங்கள் துறை கிடையாது’ என அலட்சியமாக பேசுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.